நாட்டின் பணவீக்க விகிதம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.57 சதவீதமாக அதிகரித்துள்ளது.தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 0.26 சதவீதமாக இருந்தது. இப்போது 0.31 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் விகிதம் 8.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருள்கள், எரிபொருள் மற்றும் உற்பத்தி பொருள்களின் விலை உயர்ந்ததுதான் பணவீக்கம் விகிதம் அதிகரித்துள்ளதற்குக் காரணம். இதுதவிர பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகள் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
பருத்தி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை 8 சதவீதமும், தேயிலையின் விலை 7 சதவீதமும், நறுமணப் பொருள்களின் விலை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மொத்த விலைக் குறியீட்டு எண் 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
