
வங்கிச் சேவை குறை பாடு ஏற்பட்டால் வாடிக் கையாளருக்கு வங்கிகள் இழப்பீடு தரும் விதிமுறை வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்திய வங்கி விதிமுறைகள் மற்றும் தர நிர்ணய வாரியம் (பிசிஎஸ்பிஐ), வாடிக்கையாளர் சேவை விதிமுறைகளை திருத்தி அமைத்துள்ளது. அதன் விவரம்:
வங்கிக் கணக்கில் செலுத்திய காசோலைக்குரிய தொகையை உரிய நேரத்தில் வரவு வைப்பதில் வங்கிகள் தாமதம் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும். இதுபோல் வீட்டுக் கடன் முழுவதையும் செலுத்திய 15 நாட்களுக்குள், சொத்து ஆவணங்களை வங்கிகள் தரத் தவறினாலும் இழப்பீடு கோரலாம்.
சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை வரம்பு மற்றும் பல்வேறு அபராதத் தொகையை உயர்த்தும் போது, 30 நாட்களுக்கு முன்பாக வங்கிகள் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காமல் திடீரென்று உயர்த்தினால் அதற்கு இழப்பீடு கோரலாம்.
வீடு, வாகன மற்றும் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ரசீது தர வேண்டும். மேலும் கடன் வழங்க மறுக்கும் நிலையில் அதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
இதுகுறித்து, இந்த வாரியத்தின் தலைவர் உதேஷி கூறுகையில், சேவை குறைபாடுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அதற்கான தொகையை வங்கிகளே முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
வாடிக்கையாளர்களின் புகார் குறித்து 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு இது 6 வாரங்களாக இருந்தது. சேமிப்புக் கணக்கை ரத்து செய்ய கோரினால் 3 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.
